ஞாயிறு, 7 ஜூன், 2009
about HAMAS
Refer the link : http://marudhang.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஹமாஸுக்குப் பேசத் தெரியாது!
ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றால் இஸ்ரேல்? ஹமாஸ் செய்வது அநியாயம் என்றால் இஸ்ரேல் செய்வது? ஆயிரம் சொன்னாலும் துப்பாக்கி தூக்கிய இயக்கம்தானே என்று கடுகடுத்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஹமாஸை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய தொடர் குண்டு வீச்சுகள், ஹமாஸை ஒரு ஹீரோவாக உருமாற்றி இருக்கிறது. தீவிரவாத இயக்கம் என்னும் பெயர் மெல்ல மெல்ல அழிந்து, ஒரு பேராளி குழுவாக, அரசியல் நிறுவனமாக ஹமாஸ் எழுச்சி பெற்றிருக்கிறது. இது நல்லதா தீயதா என்பதை ஆராய்வதைக்காட்டிலும் இஸ்ரேலின் அராஜகத்தால் ஏற்பட்ட இந்த தவிர்க்கமுடியாத விளைவை ஏற்றுக்கொள்வது முக்கியமானது.
பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், போதுமான அளவுக்குச் செயல்படாமல் இருப்பதும் இந்தப் புதிய மாற்றத்துக்குக் காரணம். இருபத்து இரண்டு தினங்கள், நிறுத்தாமல் காஸாவைத் தாக்கி சீரழித்திருக்கிறது இஸ்ரேல் படை. சிறு குழந்தைகளின் சடலங்கள் புதைக்குழிகளுக்கு கீழே இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. சரியான இழப்பு எண்ணிக்கை தெரியப்போவதே இல்லை. இன்றைய தினம் வரை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சிறு சத்தம் கேட்டாலும் பெரியவர்களும் குழந்தைகளும் ஓடிச்சென்று பதுங்குக்குழிக்குள் மறைந்துகொள்கிறார்கள் . போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், பீதியும் ரணமும் வலியும் ஆறவில்லை.
ஏன் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை? உதடுகள் துடிக்க கேள்வி எழுப்புகிறார்கள் பாலஸ்தீன மக்கள். குளித்து நாள்கள் பல ஆகிவிட்டன. குடிக்கவே போதுமான நீர் இல்லை. காலி கோகோ கோலா பாட்டில்களை ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு சிறுவர்கள் பல மைல் தொலைவு நடந்துசெல்கிறார்கள். அரசாங்கமும் எங்களைப் போலவே இடிந்து உட்கார்ந்திருப்பது வேதனையளிக்கிறது. இஸ்ரேலைத் திருப்பித் தாக்கவும் இல்லை. எங்களை மீட்டெடுக்கவும் இல்லை.
இஸ்ரேல் போன்ற வலிமையான ஒரு தேசத்தை திருப்பித் தாக்கும் திராணி உண்டா என்றெல்லாம் யோசிக்கவில்லை ஹமாஸ். தோதான சமயங்களில், இஸ்ரேலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் அரசாங்கமா, ஃப்பூ என்ற ஊதித்தள்ளும் இஸ்ரேல்கூட, ஹமாஸ் என்றால் சற்றே பின்வாங்குகிறது. இஸ்ரேலின் ஆயுத பலத்தையும் ஆள்பலத்தையும் ஹமாஸோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது என்றாலும், ஹமாஸின் கெரில்லாத் தாக்குதல் போர்முறைகள் மீது இஸ்ரேலுக்கு அச்சமுண்டு. வான் படைத் தாக்குதலை முன்பே ஆரம்பித்துவிட்ட இஸ்ரேல், தரைப்படைத் தாக்குதலை இறுதிகட்டத்தில்தான் நிகழ்த்தியது. அதுவும் தயக்கத்துடன்தான். காரணம், ஹமாஸ்.
ஹமாஸ் ஒரு ஹீரோவாக உதயமாவது இந்த இடத்தில்தான். இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சர்வதேச அளவில் ஹமாஸ் ஒரு சவாலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்களின் நிஜமான பிரதிநிதி முகமது அப்பாஸின் அரசாங்கம் அல்ல, ஹமாஸ்தான் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முகமது அப்பாஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காஸா பகுதி மக்கள் ஹமாஸை திடமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸால் வெற்றிபெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால், முன்பை காட்டிலும் கூடுதலான மக்கள் ஆதரவை ஹமாஸ் திரட்டியிருக்கிறது. இந்த அரசியல் வெற்றியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டது ஹமாஸ். காஸா மக்களே, எமக்குப் பின்னால் அணிதிரளுங்கள். எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். நாங்கள் உடனிருக்கிறோம். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் முன்னெடுத்துச் செல்வோம். உங்கள் ஆதரவுடன்.
ஹமாஸ் தொடங்கப்பட்டது 1987ம் ஆண்டில். ஹமாஸ் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இன்னொரு அமைப்பு. ஜமாத் அல் இக்வான் அல்முஸ்லிமின் என்பது அதன் பெயர். இஸ்லாமிய சகோதரத்துவம் என்று அர்த்தம். சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வீதிகள் அமைத்திருக்கிறார்கள். மசூதிகள் கட்டியிருக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாகப் பரப்பியிருக்கிறார்கள். ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக்கூட உருவாக்கியிருக்கிறார்கள். முக்கிய நம்பிக்கைகள் இவை. அல்லாஹ்வையும் இறை நம்பிக்கையையும் போற்றுவோம். இஸ்லாமிய நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருப்போம்.
தொடங்கப்பட்டது எகிப்தில் என்றாலும் மெல்ல மெல்ல சிரியா, ஜோர்டன் என்று ஆரம்பித்து மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இவர்கள் பரவ ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனக் கிளை 1946ல் ஜெருசலேத்தில் உருவானது. எழுபதுகளில், ஷேக் முகமது யாசின் என்பவர் தலைமையில் இந்த இயக்கம் காஸாவில் செயல்பட்டு வந்தது. இதுவே பின்னர் ஹமாஸாக உருமாறியது.
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைனை முதன் முறையாக இஸ்லாமிய நோக்கத்தில் அணுகியது ஹமாஸ். பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை, இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். அதை இறைவனின் பெயரால் தடுத்து நிறுத்தவேண்டும். இஸ்லாம் தழைக்கவேண்டுமானால், இஸ்லாமியர்கள் உயிர்த்திருக்கவேண்டுமானால், இஸ்ரேல் மீது புனிதப் போர் தொடுக்கவேண்டும். இஸ்ரேலை எதிரி தேசமாகக் கருதவேண்டும். யூதர்களை, எதிரிகளாக.
ஒரு பக்கம், சமூக சேவைகள். இன்னொரு பக்கம் மதச் சேவைகள். மற்றொரு பக்கம், இஸ்ரேலை எதிர்ப்பதற்கான தயாரிப்புகள். மூன்றையும் சமஅளவில் முன்னெடுத்துச்சென்றது ஹமாஸ். எதிலும் குறை வைக்கக்கூடாது என்பதில் ஹமாஸ் தெளிவாக இருந்தது. தனிமனித ஒழுக்கம் முக்கியம். இஸ்லாமிய வாழ்க்கை நெறி முக்கியம். சாலைகள், பள்ளிக்கூடங்கள் முக்கியம். எதிரிகளை அழிப்பதும் முக்கியம்.
பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. (பாலஸ்தீன விடுதலை இயக்கம்) ஹமாஸிடம் இருந்து இரு முக்கிய விஷயங்களில் வேறுபடுகிறது. பி.எல்.ஓ. இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதில்லை. தேவைப்பட்டால் இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஹமாஸுக்கு பேசப் பிடிக்காது. எதிரிகளுடன் என்ன பேசுவது? பேசி தீர்க்கக்கூடிய பிரச்னையா இது? எதிரிகளை ஒழிப்போம். புனித இஸ்லாமிய பாலஸ்தீனை உருவாக்குவோம்.
தொடக்கக் காலத்தில், யூதர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது ஹமாஸ். அரசாங்கம் இழைக்கும் குற்றங்களுக்கு பொது மக்களைத் தண்டிக்கலாமா என்று கேட்கப்பட்டபோது ஹமாஸ் சீறிப் பாய்ந்தது. இவர்கள் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்? ஓர் அரசாங்கம் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கவேண்டாமா? எதிர்த்து போராட வேண்டாமா? தவிரவும், பொதுமக்கள் ராணுவத்தினர் என்று தனித்தனி பிரிவுகள் இல்லை அங்கே. சுழற்சி முறையில் சிவிலியன்கள் ராணுவத்தில் பணிபுரிந்தாகவேண்டும். ஆகவே, யூதர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளே.
இஸ்ரேலின் நிரந்தர தலைவலியாக ஹமாஸ் மாறிப்போனது. 2000ம் ஆண்டு முதல் 2003 வரை ஹமாஸ் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களைக் கண்டு அலறியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தது இஸ்ரேல். அமெரிக்காவின் உதவியுடன். அழிவதற்கு மாறாக கூடுதல் வளர்ச்சி பெற்றது ஹமாஸ். அட பரவாயில்லையே நமக்காக போராடுவதற்கு ஓர் இயக்கமாக இருக்கிறதே என்று மக்களும் ஹமாஸின் பின்னால் அணிதிரள ஆரம்பித்தார்கள்.
ஹமாஸ் தன் போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டது. தேவைப்படும்போது மட்டுமே ஆயுதம். பிற சமயங்களில், அரசியல் பணிகள். ஆளுங்கட்சியின் (பி.எல்.ஓ.வின் ஃபதா கட்சி) ஊழல்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானது ஹமாஸ். ஜனவரி 2006ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அபரிமிதமான வெற்றியை அள்ளிக்கொண்டபோது, உலகம்தான் வாய்பிளந்து நின்றதே தவிர பாலஸ்தீனர்கள் வியக்கவில்லை. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்பேற்ற ஹமாஸ் தலைவர்கள் ஜூன் 2007ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். மக்களே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட பிறகு எங்களை யாராலும் அகற்ற முடியாது என்று திமிறி எழுந்த ஹமாஸ் வலுக்கட்டாயமாக காஸாவைக் கைப்பற்றிக்கொண்டது.
கிழக்குக் கரை முகமது அப்பாஸின் (ஃபதா கட்சி) கட்டுப்பாட்டில் இருக்கிறது. காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில். இரு வேறு அரசாங்கங்கள் அங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் எதிரெதிரானவை. ஒன்று மற்றொன்றை ஏற்றுக்கொள்வதில்லை. தேவைக்கேற்ப தன் போர்முறைகளையும் கருவிகளையும் மாற்றிக்கொள்ளத் தெரிந்ததால் ஃபதாவைவிட ஹமாஸுக்கு அதிக ஆதரவும் வரவேற்பும் கிடைத்துவருகிறது.
தற்போது ஹமாஸ் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் ஆயுதம், அரசியல் பிரசாரம். சர்வதேச கவனத்தை காஸாவை நோக்கி திருப்பியாகவேண்டும். பாலஸ்தீன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவேண்டும். இஸ்ரேலின் மேலாதிக்கத்தை முறியடிக்கவேண்டும். பாலஸ்தீனர்களுக்கு சுதந்தர தேசத்தைப் பெற்றுத்தரவேண்டும். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது ஹமாஸ்
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)
Refer the link : http://marudhang.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Posted by மருதன் at 2:47 AM 3 comments
Labels: பாலஸ்தீனம், ஹமாஸ்
Saturday, November 29, 2008
மீடியாவை நம்பலாமா?
நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.
பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.
தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.
பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.
எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?
அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.
மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?
கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.
அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா? பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?
எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.
எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.
பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.
பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏன் நல்லா தான போய்கிட்டு இருக்கு போட்டோ எல்லாம் போட்ருக்கு vvmk கு வேட்டு வைக்க ஐடியா வா இதல்லாம் மெயில் ல அனுப்புங்கப்பா.............
பதிலளிநீக்கு